செய்திகள்

பேஸ்புக்கில் தரக்குறைவாக விமர்சனம் செய்தவர் கைது

Published On 2018-12-24 09:13 GMT   |   Update On 2018-12-24 09:13 GMT
பெரியபாளையம் அருகே பேஸ்புக்கில் தரக்குறைவாக விமர்சனம் செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள வெங்கல், ஜமீன்தார் தெருவைச் சேர்ந்தவர் வேல். இவர் ஒரு தரப்பினர் பற்றி அவதூறாக பேசி ‘பேஸ்புக்கில்’ பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு தரப்பினர் ஆவேசம் அடைந்தனர். ‘பேஸ்புக்கில்’ தரக்குறைவாக பேசி பதிவிட்ட வேலை கைது செய்யக்கோரி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் எதிர் தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் இரண்டு தரப்பினரிடையே மோதல் உருவாகும் நிலை உருவானது.

ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே திருவள்ளூர் அருகே ஈக்காடு பகுதியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த வேலை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News