செய்திகள்
பரமக்குடியில் சென்னை போலீஸ்காரர் மாரடைப்பால் மரணம்
பரமக்குடியில் சென்னை போலீஸ்காரருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
ராயபுரம்:
சென்னை ஆர்.கே.நகர் போலீசில் குற்றப்பிரிவு எழுத்தாளராக பணிபுரிந்தவர் பாலகிருஷ்ணன் (35). இவர் பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
அவரது அண்ணன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தங்கியுள்ளார். அவரைப் பார்க்க நேற்று புறப்பட்டு சென்றார். இரவு 9.30 மணி அளவில் பரமக்குடி சென்ற அவர் பஸ்சில் இருந்து இறங்கினார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மயங்கிய அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மரணம் அடைந்த போலீஸ்காரர் பாலகிருஷ்ணனுக்கு பிரியா என்ற மனைவியும், விபேஸ்நாத் என்ற மகனும், தன்விகா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர்.