செய்திகள்

மதுரையில் அரசு பஸ்சில் இளம்பெண்ணிடம் 10 பவுன் நகை கொள்ளை

Published On 2018-12-18 11:59 GMT   |   Update On 2018-12-18 11:59 GMT
மதுரையில் அரசு பஸ்சில் இளம்பெண்ணிடம் 10 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

அண்மைக்காலமாக வெளியூர்களில் இருந்து மதுரைக்கு வரும் பஸ் பயணிகளிடம் பணம், நகைகளை கொள்ளையடிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. வாரத்தில் பலர் தங்களது உடைமைகளை இழந்து போலீசில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

கடந்த 15-ந்தேதி தூத்துக்குடியை சேர்ந்த உமாமகேஸ்வரி என்ற பெண் பஸ்சில் மதுரைக்கு வந்தபோதுஅருகில் அமர்ந்திருந்த மர்ம பெண் 8 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது

இந்த நிலையில் தற்போதும் வெளியூர் பெண் பயணியிடம் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கரூர் வையாபுரி நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி லட்சுமி (வயது39). இவர் சம்பவத்தன்று தனது மாமியாருடன் பரமக்குடியில் இருந்து கரூர் செல்வதற்காக மதுரைக்கு வந்தார்.

எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இறங்கிய அவர்கள் ஆரப்பாளையம் செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது லட்சுமி தூக்கக்கலக்கத்தில் இருந்தார். அருகில் அமர்ந்திருந்த பெண் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லட்சுமியின் கைப்பையை திருடிக்கொண்டு தப்பினார். அதில் 10 பவுன் நகை இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News