செய்திகள்

சேலம் அருகே கணவர்-மாமனார் கைது: கோவிலில் கிடா வெட்டி உறவினர்களுக்கு விருந்து வைத்த இளம்பெண்

Published On 2018-12-12 11:18 GMT   |   Update On 2018-12-12 11:18 GMT
தீவட்டிபட்டி இளம்பெண்ணை தாக்கிய கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர். இதனை கிடா வெட்டி விருந்து வைத்து மனைவி கொண்டாடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி கள்ளிகாடு பகுதியை சேரந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சீனிவாசன் (33). லாரி டிரைவராக உள்ளார். சீனிவாசன் மனைவி ராமாயி (29). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. ராமாயி, சீனிவாசனுக்கு அத்தை மகள் ஆவார்.

இந்த நிலையில் சீனிவாசன் தன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்தார். மேலும் மாமனார் ராஜேந்திரன் மருமகளை மானபங்கம் செய்ததாக தெரிகிறது. இதனை தட்டிகேட்ட உறவினர்கள் அனைவரிடமும் தகராறு செய்துள்ளனர்.

இது குறித்து தீவட்டிபட்டி போலீசில் ராமாயி புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் தீவட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரன் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதனால் மகிழ்ச்சியடைந்த ராமாயி மற்றும் அவரது பெற்றோர், உறவினர்களுக்கு கள்ளி காட்டில் உள்ள எல்லம்மாள் கோவிலில் இன்று கிடாவெட்டி விருந்து வைத்தனர்.

கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டதை தன் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் கிடா வெட்டி விருந்து வைத்து கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News