செய்திகள்

பெரியார் பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் நகை- பணம் கொள்ளை

Published On 2018-12-11 10:19 GMT   |   Update On 2018-12-11 10:19 GMT
பெரியார் பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் மாவட்டம் மல்லூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பொன்னுவேல். பெரியார் பல்கலைக்கழக ஊழியர். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் 2-வது குழந்தையான ஹெம்ரிஸ்சின் (வயது 2) இடுப்பு பகுதியில் ஒரு கட்டி உள்ளதால் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி வந்து சென்றனர்.

வழக்கம் போல கடந்த 7-ந் தேதி பென்னுவேல்-சுதா தம்பதியினர் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு சேலத்தில் உள்ள அந்த ஆஸ்பத்திரிக்கு வந்தனர். கடந்த 3 நாட்களாக தங்கியிருந்து குழந்தைக்கு சிகிச்சை பெற்ற அவர்கள் நேற்றிரவு மீண்டும் வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கூரை பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அங்கிருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது. கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் அங்கிருந்த பணம்-நகையை கொள்ளையடித்து சென்றதை அறிந்த பொன்னுவேல் மல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கூரையை பிரித்து வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தை ஹேம்ரிஸ்சுக்கு சிகிச்சைக்காக சீட்டு எடுத்து வீட்டில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதால் குழந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பொன்னுவேல் தவித்து வருகிறார். எனவே கொள்ளையர்களை பிடித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News