செய்திகள்
தடுப்பு சுவரில் மோதி நிற்கும் லாரி.

பொன்னேரி அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்து

Published On 2018-12-10 09:24 GMT   |   Update On 2018-12-10 09:24 GMT
பொன்னேரி அருகே இன்று காலை நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதியதில் டேங்க் உடைந்து டீசல் கொட்டியது.
பொன்னேரி:

எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் கம்பெனிக்கு நிலக்கரி ஏற்றிக் கொண்டு இன்று அதிகாலை லாரி புறப்பட்டது.

காலை 4 மணியளவில் அந்த லாரி பொன்னேரி அருகே வேன்பாக்கத்தில் வந்தது. அரசு பள்ளி அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

இதில் லாரியின் முன் பகுதி தடுப்பு சுவரில் சொருகி நின்றது. விபத்து நடந்ததும் லாரியில் இருந்த டிரைவரும், கிளீனரும் தப்பி ஓடி விட்டனர்.

இதற்கிடையே லாரி மோதிய வேகத்தில் அதன் டீசல் டேங்க் உடைந்தது. அதில் இருந்த டீசல் வெளியேறி சாலையில் ஓடியது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் டீசல் மீது மண்ணை தூவினர். இதனால் லாரி தீப்பிடிக்காமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பள்ளி அருகே வேகத்தடை இல்லை, சாலை விரிவாக்கப்பணி முடியாமல் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.

பொன்னேரி போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
Tags:    

Similar News