செய்திகள்
சூளகிரி அருகே யானை தாக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி மரணம்
சூளகிரி அருகே ஊருக்குள் புகுந்த யானை தாக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போடூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பா (வயது50). விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை தனது தும்பிக்கையால் அவரை தாக்கி தூக்கி வீசியது.
இதில் படுகாயமடைந்த செல்லப்பா சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக செல்லப்பா இறந்தார்.
இறந்து போன செல்லப்பாவுக்கு திட்டம்மா என்ற மனைவியும், அலமேலு என்ற மகளும் உள்ளனர்.