பெதஸ்தா பிரார்த்தனை மையத்தின் வெள்ளி விழா சிறப்பு நன்றி கூட்டம்
கோவை:
கோவையிலிருந்து சிறுவாணி செல்லும் சாலையில் உள்ள காருண்யா நகரில் பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மையம் இயங்கி வருகிறது. இந்த பிரார்த்தனை மையத்தில் ஆசீர்வாத கூட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு காருண்யா நகரில் உள்ள பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மையம் எதிரில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையரங்கில் நடைபெறுகிறது.
இதில் இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா பல்கலைக் கழக வேந்தருமான டாக்டர் பால் தினகரன் மற்றும் இவாஞ்சலின் பால் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு அருளுரை வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்கள்.
பெதஸ்தா பிரார்த்தனை மையத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு சிறப்பு நன்றி பிரார்த்தனையும் நடைபெறும். பல்வேறு சபை போதகர்களும் கலந்து கொள்கிறார்கள். காருண்யா மாணவ- மாணவிகளின் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு வசதியாக கோவை காந்தி புரம் நகர பஸ் நிலையத்திலிருந்து காருண்யா நகர் செல்வதற்கும், கூட்ட முடிவில் காந்திபுரம் செல்வதற்கும் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு தங்கும் இடவசதி செய்யப்பட்டு உள்ளது. சிற்றுண்டி சாலைகள், புத்தக சாலைகள் ஆகிய வசதிகள் கூட்ட அரங்கிற்குள் இடம் பெறும். காருண்யா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை பற்றி அறிய ஸ்டால்களும் அமைக்கப்படுகிறது.
கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை பெதஸ்தா நிர்வாகி குளோரி ரவிக்குமார், அனிஷ் சுந்தர், பதிவாளர் எலைஜா பிளசிங் மற்றும் பிஷப் நாக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.