செய்திகள்

லாலாபேட்டையில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றவர் கைது

Published On 2018-11-22 17:40 GMT   |   Update On 2018-11-22 17:40 GMT
லாலாபேட்டையில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லாலாபேட்டை:

கரூர் மின்னாம் பள்ளியை சேர்ந்தவர் சுந்தரராஜ்(வயது 50). டிரம்ஸ் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளபாளையத்தை சேர்ந்த மணி என்பவரிடம் டிரம்ஸ் வாசிக்கும் கருவியை ரூ.1700-க்கு விற்றுள்ளார். அதற்கு மேலும் கூடுதலாக பணம் கேட்டு மணியிடம், சுந்தரராஜ் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் பணம் கொடுக்க முடியாது என மணி மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரராஜ் நேற்று காலை லாலாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தார். பின்னர் போலீஸ் நிலையம் முன்பு அவரது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுந்தரராஜிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவரை காப்பாற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென சுந்தரராஜ் அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவரை தாகாதவார்த்தையால் திட்டினார். இதுகுறித்து அந்த பெண் போலீஸ் லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையம் முன்பு ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News