செய்திகள்

தலை துண்டித்து படுகொலை- பாளை வாலிபர் கொலையில் தேடப்பட்டவர் கைது

Published On 2018-11-20 14:30 GMT   |   Update On 2018-11-20 14:30 GMT
நெல்லை அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட கொலையாளியை கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
நெல்லை:

பாளை வீரமாணிக்கபுரம் அருகே உள்ள தொம்மை மிக்கேல்புரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் பால்துரை (வயது19). இவர் தனது தாயார் சுசீலாவுடன் ராஜவல்லிபுரத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலை இவரது தலை துண்டிக்கப்பட்டு மேல பாலாமடை சமுதாய நலக்கூட கலையரங்க மேடையில் வைக்கப்பட்டிருந்தது.

உடல் தாமிரபரணி ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக சீவலப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் லிடியாசெல்வி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இதில் பால்துரை அந்த பகுதியில் ரவுடியாக வளர்ந்து வந்ததால் மற்றொரு பிரிவை சேர்ந்த சிலருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் சம்பவத்தன்று பால்துரையை தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்து, தலை துண்டித்து கொலை செய்தனர்.

பின்பு உடலை தாமிரபரணி ஆற்றில் வீசி விட்டு தலையை மேல பாலாமடை கலையரங்க மேடையில் வைத்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சீவலப்பேரி போலீசார் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த அருண்குமார், மகாதேவன், சுப்பிரமணியன் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வந்தனர். இவர்கள் சீவலப்பேரியை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதில் மகாதேவனை போலீசார் இன்று கைது செய்தனர். தனி இடத்தில் வைத்து அவரிடம் போலீசார் தீவரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது நண்பர்கள் அருண் குமார், சுப்பிரமணியன் உள்பட 3 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News