பழனியில் குடும்ப தகராறில் மனைவியை குத்திக் கொன்ற கணவர்
பழனி:
பழனி அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் பத்ரா (வயது 30). கூலித் தொழிலாளி. இவருக்கும் காளீஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் காளீஸ்வரி தனது 3 குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பத்ரா மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இருந்தபோதும் அடிக்கடி தனது மனைவியை பார்க்க வந்துள்ளார். ஆனால் அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இன்று காலையில் தனது மனைவியை பார்க்க வந்தபோது காளீஸ்வரி சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பத்ரா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை பல இடங்களில் குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காளீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட காளீஸ்வரியின் உடலை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய பத்ராவையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.