செய்திகள்

குமரி மாவட்டத்தில் இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 6 பேர் பலி- 22 பேருக்கு தீவிர சிகிச்சை

Published On 2018-11-13 10:52 GMT   |   Update On 2018-11-13 10:52 GMT
குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு நேற்று 2 பேர் பலியாகி உள்ள நிலையில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளதாகவும் 22 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். #swineflu
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

பன்றி காய்ச்சலுக்கு 4 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் திங்கள் சந்தை கண்டன்விளையைச் சேர்ந்த எஸ்தர் கிங் (வயது 46), அஞ்சுகிராமம் சுப்பிரமணிபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சண்முகவேல் (68) ஆகிய இருவரும் பலியானார்கள். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் வார்டில் நேற்று 12 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து பன்றி காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு மேலும் 4 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 10 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரி களில் 12 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சையில் உள்ளனர்.

இது குறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 22 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #swineflu
Tags:    

Similar News