செய்திகள்

திண்டுக்கல் அருகே கடையை உடைத்து கொள்ளை

Published On 2018-11-02 10:59 GMT   |   Update On 2018-11-02 10:59 GMT
திண்டுக்கல் அருகே கடையை உடைத்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் அருகே வெள்ளோடு நரசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் மகாராஜா. இவர் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் வெள்ள பொம்மன் பட்டி பிரிவு எதிரே புதிதாக மெக்கானிக் கடை திறந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு இருந்த உதிரி பாகங்கள் மற்றும் ரூ.3500 பணத்தையும் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

மறு நாள் காலை கடைக்கு வந்த மகாராஜா பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் கொள்ளை போனதும் தெரிய வந்தது.

இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல் 4 வழிச்சாலை ஓரம் இருந்த மெக்கானிக் ஷாப்பில் கொள்ளை போனது. மேலும் நடந்து சென்ற பெண்ணிடம் மொபைல் மற்றும் நகைகளை பறித்துச் சென்றனர்.

தொடர் கொள்ளையால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News