செய்திகள்

போரூரில் வியாபாரி வீட்டில் 25 பவுன் நகை திருட்டு

Published On 2018-10-30 22:03 GMT   |   Update On 2018-10-30 22:02 GMT
போரூரில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
பூந்தமல்லி:

சென்னை போரூர் வயர்லஸ் ஸ்டேசன் சாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் செல்வம் (வயது 40). போரூரில் மிக்சர், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வசந்தி.

நேற்று வீட்டை பூட்டிவிட்டு கடையில் உள்ள கணவருக்கு மதிய சாப்பாடு கொடுப்பதற்காக வசந்தி சென்றார். பின்னர் இவர்களது மகன் ராகேஷ் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராகேஷ், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் நகைகள் திருட்டுப்போனது தெரியவந்தது. இதுபற்றி பெற்றோருக்கும், போரூர் போலீசாருக்கு ராகேஷ் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேரமாக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News