வெள்ளகோவில் அருகே மெக்கானிக் வீட்டில் நகை-பணம் திருட்டு
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம் பாளையம் வடிவேல் நகரை சேர்ந்தவர் முருகேசன் (38). இரு சக்கர வாகன மெக்கானிக்.
இவர் தனது வீட்டை பூட்டி விட்டு நேற்று காலை குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். மதியம் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவு கம்பியால் நெம்பி திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்கப்பணம், வளையல், மோதிரம் உள்ளிட்ட 3 பவுன் நகைகளை திருட்டு போய் இருந்தது.
இதனால் முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். அவர் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் நகை- பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை - பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.