சுரங்கபாதையில் செல்லும்போது மெட்ரோ நிலையங்களில் ஏ.சி. இயங்காததால் பயணிகள் அவதி
சென்னை:
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. முழுவதும் ஏ.சி. வசதியுடன் ரெயில் ஓடி வருகிறது.
உயர்மட்ட பாதையிலும், சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் செல்கிறது. இதற்கிடையே மெட்ரோ ரெயில் சுரங்கபாதையில் உள்ள நிலையங்களுக்கு செல்லும்போது ஏ.சி.க்கள் சரியாக இயங்கவில்லை என்றும் இதனால் வெப்பம் ஏற்பட்டு வியர்ப்பதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் மூச்சு திணறல் போன்ற பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியதாவது:-
கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களில் மின்சாரத்தை சேமிப்பதற்காக ஒரு சில ஏ.சி.க்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. பொதுவாகவே சுரங்க பாதையில் சற்று வெப்பம் இருக்கும். இந்த வெப்ப காற்று வெண்டிலேசன் மூலம் வெளியேற்றப்படுகிறது.
ஆனால் ரெயில் நிலையங்களில் உள்ள கதவுகள் இடையே உள்ள இடைவேளி மூலம் சற்று வெப்பக்காற்று ரெயில் நிலையங்களுக்குள் வந்து விடுகிறது.
இதனால் ரெயில் நிலையத்துக்குள் வெப்பக் காற்று சற்று அதிகமாகி பயணிகளுக்கு மூச்சு திணறல் போன்று உணர்வு ஏற்படுகிறது. பெரும் பாலான நேரங்களில் அனைத்து ஏ.சி.க்களும் இயக்கப்பட்டே வருகின்றன என்று தெரிவித்துள்ளது. #MetroTrain #ChennaiMetroTrain