திருவாரூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து வெல்டிங் தொழிலாளி பலி
திருவாரூர்:
நாகையை அடுத்த மேலசெட்டிசேரி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 42). வெல்டிங் தொழிலாளி. இவர் நாகூரை சேர்ந்த சரவணராஜ் என்ற காண்டிராக்டரிடம் வேலை பார்த்து வந்தர்.
இந்நிலையில் நேற்று திருவாரூர் அடுத்த புலிவலம் கிராமத்தில் ஒரு வீட்டில் தெய்வேந்திரன் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது மாடியில் தெய்வேந்திரன் வெல்டிங் வேலை பார்த்த போது, திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து பலியான தெய்வேந்திரன், உடலை காண்டிராக்டர் சரவணராஜ் மீட்டு, நாகையில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் தெய்வேந்திரன் அண்ணன் ராஜகோபால், திருவாரூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில் தனது தம்பி சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.