செய்திகள்
தருமபுரி அருகே 15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்
தருமபுரி அருகே 15 வயது பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் நடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பையர்நத்தம் பகுதியை சேர்ந்த குறிஞ்சி நகரில் 15 வயது பள்ளி மாணவி. அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கும், அதே ஊரை சேர்ந்த உறவினருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 23-ந்தேதி திருமணம் நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பெண்ணிற்கு 15 வயது ஆன நிலையில் குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாக மாவட்ட சைல்டுலைன் அமைப்புக்கு புகார் வந்தது. இதைதொடர்ந்து இந்த புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண்ணிற்கு 15 வயது தான் ஆகிறது என்பதை படித்த பள்ளியில் விசாரணை மேற்கொண்டபோது தெரிய வருகிறது.
அதன் பேரில் குழந்தை திருமணம் நடத்தி வைத்த மாணவியை மீட்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாவட்ட கலெக்டரிடம் விசாரணைக்காக நேரில் ஒப்படைத்தனர். கலெக்டர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளார். விசாரணைக்கு பிறகு இந்த பெண்ணை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பாரா? திருமணத்திற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் மீதும், தாலி கட்டிய வாலிபர் மீதும் நடவடிக்கை எடுப்பாரா? என்பது இனிவரும் விசாரணையில் தெரியவரும்.