செய்திகள்

ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் 5 பவுன் சங்கிலி - பணம் திருட்டு

Published On 2018-10-17 16:03 GMT   |   Update On 2018-10-17 16:03 GMT
திருவெறும்பூரில், ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் 5 பவுன் சங்கிலி மற்றும் பணத்தை திருடிச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி:

தஞ்சாவூரை சேர்ந்தவர் அல்போன்சா (வயது40). இவர் திருச்சியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறார். அல்போன்சா திருச்சியில் இருந்து நேற்று இரவு 7 மணிக்கு தஞ்சாவூருக்கு புறப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்.2 பெட்டியில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்தார். அந்த ரெயில் இரவு 7.30 மணி அளவில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று புறப்பட்டது.

அப்போது மர்மநபர் ஒருவர், ரெயிலில் ஏறி அல்போன்சாவின் கைப்பையை பறித்துவிட்டு நடைமேடையில் குதித்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், திருடன்... திருடன்... என சத்தமிட்டபடியே அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால், ரெயில் சிறிது தூரம் தள்ளி நின்றது/ அதற்குள் மர்மநபர் தப்பி ஓடி விட்டதால் அவர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. அந்த கைப்பையில் 5 பவுன் சங்கிலி மற்றும் ரூ.8 ஆயிரம், ஒரு செல்போன் வைத்திருந்தார்.

இந்த திருட்டு குறித்து தஞ்சாவூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சக பயணிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் அல்போன்சாவிடம் அறிவுறுத்தினர். ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் மர்ம நபர் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் சக பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News