செய்திகள்

பழனி அருகே 2 வீடுகளில் புகுந்து நகை-பணம் கொள்ளை

Published On 2018-10-17 08:38 GMT   |   Update On 2018-10-17 08:38 GMT
பழனி அருகே 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:

பழனி திருநகரைச் சேர்ந்தவர் அப்துல். இவர் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கீழ் வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாடிக்கு தூங்கச் சென்று விட்டார். நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.

மேலும் பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.500 பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலையில் கீழே இறங்கி வந்த அப்துல் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் அப்துல் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

மற்றொரு சம்பவம்...

பழனி அருகே உள்ள சத்திரப்பட்டி தாசரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 45). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 3 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். காளியப்பன் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டின் முன்புறம் வைத்து செல்வார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் சாவியை எடுத்து உள்ளே புகுந்து நகையை திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

Tags:    

Similar News