வடுவூர் அருகே மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சம் - 5 பவுன் நகை திருட்டு
திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள வடுவூர் காவல் சரகத்திற்குட்பட்ட காரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பையன் (வயது 59). இவர் நேற்று வீட்டில் இருந்த 15 பவுன் நகையை வங்கியில் அடமானம் வைப்பதற்காக எடுத்து சென்றார்.
பின்னர் மன்னார்குடி கோபால சமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று 10 பவுன் நகையை மட்டும் அடகு வைத்து ரூ.1 லட்சம் வாங்கினார். இதைத் தொடர்ந்து ரூ.1 லட்சத்தையும், மீதமுள்ள 5 பவுன் நகையையும் தன்னுடைய மொபட்டின் சீட்டுக்கு அடியில் வைத்து கொண்டு செருமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு வேலையை முடித்து விட்டு மீண்டும் வெளியே வந்து மொபட்டை திறந்து பார்த்த போது பணம், நகையை காணவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வடுவூர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பணம்-நகையை திருடிச் சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுப்பையன் வங்கியில் பணம் வாங்கி வருவதை நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் இதனை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.