திருமங்கலத்தில் வழிப்பறி திருடர்கள் கைது
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள கண்டுகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்வோரை, கத்தி முனையில் மிரட்டி சிலர் வழிப்பறி செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வழிப்பறி திருடர்களை பிடிக்க போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். அப்போது 4 பேர் சந்தேகத்திற்கிடமாக அங்கு திரிந்தனர்.
அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அவர்கள் 4 பேரும் வழிப்பறி திருடர்கள் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் பெயர் ஜெய் ஹிந்துபுரம் சீனிவாசன் (வயது 25), மேல அனுப்பானடி அழகுராஜா (25), அவனியாபுரம் வீரமணி (17), வாழைத்தோப்பு சரவணன் பாரதி (17) என்பதும் இவர்கள் மீது கொலை, வழிப்பறி வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.