செய்திகள்

செஞ்சி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

Published On 2018-09-26 06:47 GMT   |   Update On 2018-09-26 06:47 GMT
தன்னை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தவர் மீதும், தனக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் மீதும் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்ததின் பேரில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கீழ்பாப்பம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 28) இவர் சென்னையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வார்.

அவ்வாறு ஜானகிராமன் கீழ்பாப்பம்பாடிக்கு வந்தபோது அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் ஜானகிராமனின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டனர். அப்போது ஜானகிராமனின் பெற்றோர் சிறுமியுடன் திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் ஜானகிராமனுக்கும் சிறுமிக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே ஜானகிராமன் அந்த சிறுமியை அவரது தாய் வீட்டில் விட்டு சென்றார்.

இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிறுமியை புதுவையில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் கொடுத்தார். அதில் தன்னை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த ஜானகிராமன் மீதும் தனக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதன்பேரில் ஜானகிராமன், அய்யனார், மண்ணாங்கட்டி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜானகிராமனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News