சோழவந்தான் பகுதியில் வயல்களில் எலி தொல்லை அதிகரிப்பு
சோழவந்தான்:
சோழவந்தான் பகுதிகளுக்கு முல்லைபெரியாறு வைகையாற்று பாசனம் மூலம் 2 மாதங்களுக்கு முன்பு விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு நெல் நடவுபணி மும்மரமாக நடந்தது.
தற்போது நெற்பயிர்கள் கதிர்களாக (பால்பிடித்தல்) மாறும் நிலையை வந்தடைந்தது. இந்த நிலையில் நெற் பயிர்களை எலிகள் கொய்து தின்று நாசப்படுத்தி வருகிறது.
இதனை தடுக்க எலிகளை கொல்வதற்கு பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகிறது பாரம்பரிய முறையான எலிகிட்டிகள் 1¾ அடி இடைவெளியில் வயல் வெளிகளில் அமைத்து வருகின்றனர்.
இதுகுறித்து எலிகிட்டி அமைக்கும் பணியை மேற்கொள்ளும் சின்னான் கூறுகையில், முதல் நாள் வைக்கப்பட்ட எலிகிட்டியை மறுநாள் சென்று எடுப்போம் கிட்டிகளில் எலி சிக்கி இறந்து கிடக்கும் அவைகளை நாங்களே அப்புறப்படுத்துவோம்.
மற்ற முறைகளை காட்டிலும் இதற்காக ஆகும் செலவு குறைவு. மேலும் எலி கிட்டி அமைத்த வயலுக்கும் எலி கிட்டி அமைக்காத வயலுக்கும் அறுவடையின் போது மகசூல் வித்தியாசம் அதிகம் என்பதை விவசாயிகள் உணரமுடியும் என்றார்.
மேலும் விவசாய பணிகளான உரமிடுதல்களை எடுத்தல், மருந்து தெளித்தல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை போல எலி கிட்டிகள் அமைக்கும் பணியை அமைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.