செய்திகள்

முதல்-அமைச்சர் வரவேற்பு நிகழ்ச்சியை சண்முகநாதன் எம்எல்ஏ புறக்கணிப்பு- கட்சி வட்டாரத்தில் பரபரப்பு

Published On 2018-09-22 10:27 GMT   |   Update On 2018-09-22 10:27 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியை சண்முகநாதன் எம்.எல்.ஏ.புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Shanmuganathanmla #edappadipalanisamy

தூத்துக்குடி:

நாகர்கோவிலில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவுக்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியை ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் புறக்கணித்தார். ஏற்கனவே தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு சங்க தேர்தல் விவகாரத்தில் சண்முகநாதனுக்கும் கட்சி தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் இது தொடர்பாக சண்முகநாதன் எம்.எல்.ஏ அளித்த பேட்டியில்," முன்பு வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவிப்பார். தற்போது, பொறுப்பில் உள்ளவர்கள் பணம் பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை அறிவிக்கின்றனர். கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் இருந்தால், அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கட்சி தலைமை அறிவித்து உள்ளது. ஆனால் தூத்துக்குடியில் தலைகீழாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆட்சியில் இருக்கும் கவனத்தை கட்சியில் செலுத்தவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சியை அழிக்க பார்க்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.


இது அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியை சண்முகநாதன் எம்.எல்.ஏ. புறக்கணித்திருப்பதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Shanmuganathanmla #edappadipalanisamy

Tags:    

Similar News