செய்திகள்

திருப்பூரில் டாஸ்மாக் சூப்பர்வைசரை மிரட்டி பணம் பறிப்பு

Published On 2018-09-20 06:36 GMT   |   Update On 2018-09-20 06:36 GMT
திருப்பூரில் டாஸ்மாக் சூப்பர் வைசரை மிரட்டி பணத்தை பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருப்பூர்:

திருப்பூர் வெள்ளியங்காடு கே.எம்.ஜி. நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சூப்பர் வைசராக ராஜா (36) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இவர் கடையில் வசூலான ரூ. 2 லட்சத்து 84 ஆயிரத்தை வங்கியில் செலுத்த பையில் எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். கரட்டாங்காடு என்ற பகுதியில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை ராஜா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதவிட்டனர். இதில் ராஜா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அதன் பின்னர் 2 பேரும் டாஸ்மாக் சூப்பர்வைசர் ராஜாவை அரிவாள் முனையில் மிரட்டினார்கள். பின்னர் அவர் வைத்திருந்த ரூ. 2 லட்சத்து 84 ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் ராஜா புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பணத்தை பறித்து சென்றவர்களை பிடிக்க நகர் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனால் பணத்தை பறித்து சென்றவர்களை பிடிக்க முடியவில்லை. அப் பகுதியில் சி.சி.டி.வி. கேமரா உள்ளதா? அதில் பணத்தை பறித்து சென்றவர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

ராஜாவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் ரூ. 2 லட்சத்து 84 ஆயிரம் பறிக்கப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News