செய்திகள்

நெல்லையில் இன்று ரெயில் முன் பாய்ந்து 2 பேர் தற்கொலை

Published On 2018-09-18 05:22 GMT   |   Update On 2018-09-18 05:22 GMT
நெல்லையில் இன்று ரெயில் முன் பாய்ந்து 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை தெற்கு பைபாஸ் ரோட்டுக்கும் குலவணிகர் புரம் ரெயில்வே கேட்டுக்கும் இடையில் உள்ள தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணமும், பாளை மகாராஜ நகர் ரெயில் தண்டவாளத்தில் ஒரு பெண்ணும் பிணமாக கிடப்பதாகவும் நெல்லை ரெயில்வே போலீசாருக்கு இன்று காலை தகவல் வந்தது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜூலியஸ் ராஜ்குமார், ஜூலியட் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

குலவணிகர்புரம் ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த ஆணுக்கு சுமார் 60 வயது இருக்கும். தலைமுடியும், மீசையும் நரைத்துள்ளது. பூப்போட்ட சாரமும், லைட் புளு கலர் சட்டையும் அணிந்துள்ளார். அவர் தற்கொலை செய்யும் பொருட்டு ரெயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துள்ளார்.

நேற்று நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை திருச்செந்தூரில் இருந்து நெல்லை வந்த ரெயில் அவர் மீது மோதி சுமார் 100 அடி தூரம் அவரது உடலை இழுத்துக்கொண்டு சென்றுள்ளது. இதில் அவரது தலை துண்டிக்கப்பட்டும், உடல் உறுப்புகள் சிதைந்தும் உள்ளது. கையின் ஒரு துண்டு பகுதி அந்த பகுதியில் காணவில்லை. ரெயில் என்ஜினில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதன் பிறகு பல ரெயில்கள் அந்த வழியாக சென்று வந்துள்ளது. இதனால் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளது. அவர் யார்? எதற்காக தற்கொலை செய்தார் என்று ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாளை மகாராஜநகர் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பெண்ணுக்கு சுமார் 55 வயது இருக்கும். மஞ்சள் கலரில் பூப்போட்ட சேலையும், லைட் புளு கலர் பாவாடையும் அணிந்துள்ளார். இவரது பெயர் விபரமும் தெரிய வில்லை.

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதிக்கு வந்து தியாகராஜநகர் பூங்கா அருகே உள்ள கடையில் அமர்ந்து பொதுமக்கள் கொடுப்பதை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இன்று காலை நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரெயில் சென்ற போது தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இவர் குடும்பத்தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி 2 நாட்களாக அந்த பகுதியில் சுற்றியிருக்கலாம் என்றும், இன்று காலை மனம் உடைந்து, ரெயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்கொலை செய்த 2 பேரும் தனித்தனி சம்பவத்தில் வெவ்வேறு ஆட்களா? அல்லது அவர்கள் உறவினர்களா? என்றும் தெரிய வில்லை. ஒருவேளை உறவினர்களாக இருந்து அந்த ஆண் தற்கொலை செய்ததால், பெண்ணும் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தனித்தனி சம்பவமா என்றும் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் இன்று காலை நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News