செய்திகள்

முதலியார்பேட்டையில் குடிபோதையில் வாலிபர்களை வழிமறித்து தாக்குதல்- 3 பேர் கைது

Published On 2018-09-15 10:06 GMT   |   Update On 2018-09-15 10:06 GMT
முதலியார் பேட்டையில் குடிபோதையில் வாலிபர்களை வழிமறித்து தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 27). இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இவர் வண்ணான் குளத்தை சேர்ந்த தனது நண்பர் முகேசுடன் சினிமா பார்க்க புதுவை வந்தார். ஆனால், டிக்கெட் கிடைக்காததால் முகேசை அவரது வீட்டுக்கு பிரபாகரன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

வண்ணான்குளம் பகுதியில் சென்ற போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டு இருந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரபாகரனையும், முகேசையும் வழிமறித்து தகராறு செய்து பின்னர் இருவரையும் அந்த கும்பல் தடியால் தாக்கியது.

இதில் காயம் அடைந்த பிரபாகரனும், முகேசும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் இதுகுறித்து பிரபாகரன் முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிரபாகரன் மற்றும் முகேசை தாக்கியவர்கள் வண்ணான் குளம் பகுதியை சேர்ந்த சின்னராஜா, ராஜேந்திரன், சத்யநாராயணன் மற்றும் ராஜா ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து சின்ன ராஜா, ராஜேந்திரன், சத்ய நாராயணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜாவை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News