செய்திகள்

7 பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்- டிடிவி தினகரன்

Published On 2018-09-15 05:17 GMT   |   Update On 2018-09-15 05:17 GMT
ராஜூவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran #RajivCaseConvicts
திருச்சி:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அற்புதம்மாள் கூறியதை போன்று இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம். ஆளுனர் நல்ல முடிவு எடுப்பார். 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.



தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டுக்கு மின் வாரியத்தின் திட்டமிடாத நடவடிக்கையே காரணமாகும். நீர் நிலைகளை உரிய நேரத்தில் தூர்வாராமல் வெறும் கணக்கு காட்டி பணத்தை எடுத்துக் கொண்டதாலேயே காவிரி, டெல்டா மாவட்டங்களில் கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை. உபரிநீர் வீணாக கடலில் கலக்க நேரிட்டுள்ளது.

விரிவுப்படுத்த வேண்டிய தேசிய நெடுஞ்சாலைகள் பலவும் தமிழகத்தில் உள்ள நிலையில், விளை நிலங்களை அழித்து கொண்டு வரப்படும் 8 வழிச்சாலை தேவையற்றது. மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசால் செயல்படுத்தவும் முடியாது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பயம் காரணமாகவே முன் கூட்டியே அமைச்சர்கள் முகாமிட்டு பிரசாரம் செய்கின்றனர். அவர்கள் வாக்கு கேட்பது எங்களுக்குத் தான் சாதகமாக இருக்கும். அ.தி.மு.க.வினர் டெபாசிட் பெறுவதற்காக போராடுகின்றனர்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறும். குக்கர் சின்னத்தை சட்டப்படி கோருவோம். எதிலும் அலட்சிய போக்குடன் செய்யப்படும் இந்த அரசை மக்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்புவர்.

அரசே மூட வேண்டிய சூழலில் உள்ள நிலையில், அரசு பள்ளிகளை மூட முடி வெடுத்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பள்ளிகள் திறக்கப்படும். அ.தி.மு.க.வை பா.ஜ.க. கைவிட்டு விட்டது என்பது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசி வருவதில் இருந்தே தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran #RajivCaseConvicts
Tags:    

Similar News