பூந்தமல்லி கிளை சிறையில் கைதியிடம் செல்போன் சிக்கியது
பூந்தமல்லி:
பூந்தமல்லி கரையான் சாவடியில் உள்ள கிளை சிறையில் 18 கைதிகள் உள்ளனர். அம்பத்தூர் இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் உள்ளனர். சிறைத்துறை அதிகாரி கோதண்டராமன் நேற்று சிறையில் திடீர் சோதனை நடத்தினார்.
18 கைதிகள் தங்கி இருந்த அறையில் நடத்திய சோதனையில் சூளைமேட்டை சேர்ந்த விஜய்தண்டபாணி (45) என்ற கைதியிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, பேட்டரி போன்றவற்றை அவர் கைப்பற்றினார். சிறைக்குள் செல்போன் எப்படி வந்தது. அவருக்கு சலுகை காட்டியது யார் என்று விசாரணை நடத்தப்படுகிறது.
மேலும் விஜய் தண்டபாணி பல்வேறு மோசடி வழக்கில் கைதாகி உள்ளார். அவருக்கு வெளி மாநிலங்களில் இருந்து தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. அதனால் அவரது சிம்கார்டில் இருந்து யார் யாருக்கு பேசியுள்ளார் என்ற விவரங்களை போலீசார் சேகரிக்கின்றனர்.
பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.