செய்திகள்

லைப்ஜாக்கெட்டு இல்லாமல் சுற்றுலா பயணிகளை பரிசலில் அழைத்து சென்ற 5 பேர் கைது

Published On 2018-09-12 14:45 GMT   |   Update On 2018-09-12 14:45 GMT
ஒகேனக்கல்லில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் லைப்ஜாக்கெட்டு இல்லாமல் சுற்றுலா பயணிகளை பரிசலில் அழைத்து சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி:

கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் வழக்கமான பாதையான மாமரத்து கடுவு பகுதியில் உள்ள பரிசல் நிலையத்தில் பரிசல் இயக்க தடை செய்யப்பட்டது. 5 ஆயிரம் கனஅடிக்கு குறைவாக நீர்வரத்து இருந்தால் மட்டும் வழக்கமான பாதைகளில் பரிசல் இயக்க தடை நீக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

நீர்வரத்து படிபடியாக குறைந்ததால் கோத்திக்கல் பாறையில் இருந்து மணல் திட்டு வரை மட்டுமே மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. ஒகேனக்கல்லில் உள்ள ஊட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (வயது 45), அதே பகுதியைச்  சேர்ந்தவர்கள் முருகன் (42), கண்ணையன் (53), வெங்கடேசன் (42), நாடார் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (40) ஆகிய பேரும் சுற்றுலா பயணிகளை பரிசல் அழைத்து செல்லும் பரிசல் ஒட்டி வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகளை பரிசலில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு லைப்ஜாக்கெட் இல்லாமல் அழைத்து சென்றனர். பின்னர் மீண்டும் அவர்களை கரைக்கு கொண்டு வந்து விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஒகேனக்கல் போலீசார் மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசல் இயக்கக்கூடாது என்று தடை செய்யப்பட்ட பகுதிகளில் லைப்ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுற்றுலா பயணிகளை பரிசலில் அழைத்து சென்றதால் நடராஜ், முருகன் உள்பட 5 பரிசல் ஒட்டிகள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News