ராஜபாளையத்தில் முறைகேடாக மணல் கடத்திய 10 லாரிகள் பறிமுதல்
ராஜபாளையம்:
ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையிலான மணல் தடுப்பு சிறப்பு குழுவினர் இன்று அதிகாலை ராஜபாளையம்-தென்காசி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 10 லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு வரிசையாக வந்தன. அந்த லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சவுடு மண்ணுக்கு அனுமதி பெற்று இருப்பதாக கூறி ஆவணங்களை காட்டினர்.
மேலும் ஆன்லைன் ரசீதையும் லாரியில் வந்தவர்கள் கொடுத்தனர். ஆன்லைன் ரசீதை வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே ஆய்வு செய்த போது அந்த ரசீதுகளில் முறைகேடு செய்து இருப்பது தெரியவந்தது.
கடந்த மாதத்துக்கு அனுமதி பெற்றுவிட்டு தொடர்ந்து அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரிந்தது.
இந்த மணல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ராஜபாளையம் வழியாக நெல்லை மாவட்டம் கடையத்துக்கு கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 10 மணல் லாரிகளையும் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த லாரிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.