செய்திகள்
கடத்தப்பட்டு வீடு திரும்பிய கணேஷ்

மதுரவாயலில் கடத்தப்பட்ட பங்கு சந்தை ஆலோசகர் வீடு திரும்பினார்

Published On 2018-09-10 09:22 GMT   |   Update On 2018-09-10 09:22 GMT
மதுரவாயலில் கடத்தப்பட்ட பங்கு சந்தை ஆலோசகர் வீடு திரும்பினார். ஆள் மாறாட்டத்தில் தன்னை கடத்தியதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். #ConsultantKidnapped
போரூர்:

சென்னை பூந்தமல்லி ருக்மணி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 35) பங்கு சந்தை ஆலோசகர். கடந்த 7-ந்தேதி இரவு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கால் டாக்சி மூலம் வீடு திரும்பினார்.

மதுரவாயல் ஏரிக்கரை அருகே வந்தபோது மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கணேசை கடத்தி சென்றனர்.

இதுகுறித்து கால் டாக்ஸி டிரைவர் ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மதுரவாயல் போலீசார் மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் இரவு தொலைபேசி மூலம் தனது மனைவி நித்யாவிற்கு தொடர்பு கொண்ட கணேஷ் ஆள் தெரியாமல் தம்மை 4 பேர் கடத்தி சென்றுவிட்டதாகவும் ஈரோடு அருகே உள்ள அவினாசி பகுதியில் அந்த கும்பல் தம்மை கண்களை கட்டி இறக்கி விட்டு சென்று விட்டதாகவும் பஸ் மூலம் புறப்பட்டு சென்னை வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். நேற்று காலை 10 மணி அளவில் கணேஷ் வீடு வந்து சேர்ந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு கணேஷ் மனைவி நித்யா தகவல் தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலை மதுரவாயல் காவல் நிலையத்திற்கு கணேசை வரவழைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் கூறுகையில் தன்னை கடத்தியவர்கள் தங்களை போலீஸ் என்று கூறி கடத்தியதாக தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #ConsultantKidnapped



Tags:    

Similar News