செய்திகள்
போடியில் 2-வது மாடியில் தவறிவிழுந்து தொழிலாளி பலி
போடியில் 2-வது மாடியில் இருந்து தவறிவிழுந்து தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
மேலசொக்கநாதபுரம்:
போடியை சேர்ந்தவர் சந்திரன் (வயது40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கட்டிடத் தொழிலாளியான சந்திரன் அதேபகுதியை சேர்ந்த என்ஜீனியரிடம் வேலைபார்த்து வந்தார். மொத்தமாக காண்ட்ராக்ட் எடுத்து வீடுகளுக்கு கட்டுமானப்பணி மேற்கொண்டு வந்தார்.
அமராவதி பகுதியில் உள்ள வீட்டுக்கு கம்பி கட்டும் பணிக்காக சந்திரன் சென்றுள்ளார்.
2-வது மாடியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரன் மாடியில் இருந்து தவறி விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் போடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.