செய்திகள்

பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் கார் பார்க்கிங் கட்டுமான பணிகள் - கேரள வனத்துறை அடாவடி

Published On 2018-09-03 12:14 GMT   |   Update On 2018-09-03 12:14 GMT
பசுமைத் தீர்ப்பாய உத்தரவை மீறி பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான தேக்கடியில் கேரள வனத்துறையினர் கார் பார்க்கிங் கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளனர்.
கூடலூர்:

தேக்கடி ஆனவச்சால் பகுதியில் கேரள வனத்துறை சார்பில் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டது. இந்த இடம் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ளது. தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடமாகும்.

எனவே இங்கு கார் பார்க்கிங் அமைக்க தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் சென்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நடந்து வந்த நிலையில் கேரள வனத்துறையினர் அமைத்திருந்த வேலி மற்றும் பெயர் பலகை அகற்றப்பட்டது.

கடந்த நவம்பர் 15-ந் தேதி கேரள வனத்துறையினரால் அமைக்கப்பட்ட கார் பார்க்கிங் செயல்படுத்த தடையில்லை. அந்த இடத்தில் தரையை மட்டுமே பயன்படுத்தலாம். கட்டிடங்களோ கட்டுமான பணிகளோ செய்யக்கூடாது என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்தது. அன்று முதல் தேக்கடி கார் பார்க்கிங் நடைமுறையில் இருந்து வருகிறது.

கேரளாவில் தற்போது மழை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் தேக்கடிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே மீண்டும் தேக்கடியில் கார் பார்க்கிங் அமைப்பதற்கான பணியை கேரள வனத்துறை தொடங்கியுள்ளது.

பசுமைத் தீர்ப்பாய உத்தரவை மீறி நடக்கும் இந்த பணிகளை உடனடியாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி எடுத்து வந்த நிலையில் அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய 142 அடியையும் குறைத்து தற்போது 139.99 அடி மட்டுமே தேக்கப்பட்டு வருகிறது.

தற்போது பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதால் கேரள அரசு மீண்டும் தனது அடாவடியை தொடங்கியுள்ளது.

எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News