search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerala forest"

    கேரள வனபகுதியில் மீன் பிடிக்க சென்ற ஆதிவாசி வாலிபர் யானை மிதித்து பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர் கோடு அருகே உள்ள விதுராவை அடுத்த தேப்பாறையில் வனப்பகுதி உள்ளது.

    இங்குள்ள வனப்பகுதியில் ஆதிவாசிகள் குடியிருப்பு உள்ளது. ஏராளமான ஆதிவாசிகளும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். தற்போது இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதிக்கு செல்லும் ஆதிவாசிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்திருந்தனர்.

    தேப்பாறையை சேர்ந்த ஆதிவாசி வாலிபரான அனூஷ் (வயது 26) என்பவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ஆற்றுக்கு மீன்பிடிக்கச் சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் கிராமத்திற்கு திரும்பவில்லை.

    இதனால் கவலை அடைந்த அவரது மனைவி சூர்யா அதுபற்றி உறவினர்களிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் சிலர் அனூசை தேடி வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு உள்ள புதருக்குள் அனூஷ் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

    அவரை யானை மிதித்து கொன்றிருந்தது. இதுபற்றி வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று யானையின் காலடி தடங்களை பார்வையிட்டு அதை உறுதிசெய்தனர். இதன் பிறகு அனூசின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி விதுரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆதிவாசி அனூஷ் பலியான இடத்திற்கு அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அங்கு அதிக அளவில் யானைகள் நடமாட்டம் இருப்பதாகவும் அந்த யானைகள் தாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி வழியாக அடிக்கடி கடந்து செல்வதாகவும் ஆதிவாசிகள் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். எனவே யானைக் கூட்டத்தை அங்கிருந்து விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
    பசுமைத் தீர்ப்பாய உத்தரவை மீறி பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான தேக்கடியில் கேரள வனத்துறையினர் கார் பார்க்கிங் கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளனர்.
    கூடலூர்:

    தேக்கடி ஆனவச்சால் பகுதியில் கேரள வனத்துறை சார்பில் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டது. இந்த இடம் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ளது. தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடமாகும்.

    எனவே இங்கு கார் பார்க்கிங் அமைக்க தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் சென்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நடந்து வந்த நிலையில் கேரள வனத்துறையினர் அமைத்திருந்த வேலி மற்றும் பெயர் பலகை அகற்றப்பட்டது.

    கடந்த நவம்பர் 15-ந் தேதி கேரள வனத்துறையினரால் அமைக்கப்பட்ட கார் பார்க்கிங் செயல்படுத்த தடையில்லை. அந்த இடத்தில் தரையை மட்டுமே பயன்படுத்தலாம். கட்டிடங்களோ கட்டுமான பணிகளோ செய்யக்கூடாது என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்தது. அன்று முதல் தேக்கடி கார் பார்க்கிங் நடைமுறையில் இருந்து வருகிறது.

    கேரளாவில் தற்போது மழை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் தேக்கடிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே மீண்டும் தேக்கடியில் கார் பார்க்கிங் அமைப்பதற்கான பணியை கேரள வனத்துறை தொடங்கியுள்ளது.

    பசுமைத் தீர்ப்பாய உத்தரவை மீறி நடக்கும் இந்த பணிகளை உடனடியாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி எடுத்து வந்த நிலையில் அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய 142 அடியையும் குறைத்து தற்போது 139.99 அடி மட்டுமே தேக்கப்பட்டு வருகிறது.

    தற்போது பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதால் கேரள அரசு மீண்டும் தனது அடாவடியை தொடங்கியுள்ளது.

    எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    ×