செய்திகள்
கொலை செய்யப்பட்ட கணேசன்

கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவி

Published On 2018-09-03 05:58 GMT   |   Update On 2018-09-03 05:58 GMT
தருமபுரி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரின் தொல்லை தாங்க முடியாமல் மனைவி கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள தேவர்ஊத்துபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 62). விவசாயி.

இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களுக்கு சுகுணா (37) என்ற மகள் உள்ளார். சுகுணாவை வடிவேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். சுகுணா தனது கணவருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

கணேசனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது மனைவி கன்னியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு கணேசன் குடித்துவிட்டு வந்து மீண்டும் கன்னியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கன்னியம்மாள் மறைந்து வைத்திருந்த கட்டையை எடுத்து கணேசனின் தலையில் அடித்தார். இதில் கணேசன் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

சிறிது நேரத்தில் கணேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவர் இறந்ததும் அதனை கண்டுகொள்ளாமல் கன்னியம்மாள் வீட்டின் அருகில் உள்ள அறையில் தூங்க சென்றார்.

இன்று காலை விடிந்ததும் கணேசன் அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கு இருந்த கன்னியம்மாளிடம் அவர்கள் கேட்டபோது, தான் கணேசனை கட்டையால் தாக்கியதால் இறந்து விட்டதாக கூறினார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் பிடித்து வைத்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்தவுடன் கன்னியம்மாளை அக்கம்பக்கத்தினர் ஒப்படைத்தனர். பிணமாக கிடந்த கணேசனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கன்னியம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தினமும் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் கட்டையால் அடித்து கொன்றேன் என்று கூறினார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News