திண்டுக்கல் அருகே அ.தி.மு.க. எம்.பி.யை முற்றுகையிட்ட மக்கள்
வடமதுரை:
கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை. பாராளுமன்ற துணை சபாநாயகரான இவர் கரூர் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.
அதன் பின்னர் வேங்கன்குறிச்சி என்ற இடத்துக்கு சென்ற போது அங்கு நின்ற மக்கள் அவரை முற்றுகையிட்டு கோசம் போட்டனர். இவ்வளவு நாள் எங்களைப்பற்றி சிந்திக்க வில்லை. தேர்தல் நெருங்கியதும் எங்களை பார்க்க வருகிறீர்களா? வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
எத்தனை முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தாலும் பிரச்சினை தீரவில்லை என்று ஆவேசமாக அனைவரும் பேசினர். இதனால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அதிகாரிகள் மற்றும் அங்கு நின்ற கட்சி நிர்வாகிகள் மக்களை சமரசப்படுத்தி தம்பித்துரை எம்.பி.யை அவசரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளது. இந்த சமயத்தில் மக்கள் அ.தி.மு.க. எம்.பி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் கட்சியினரிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #ADMKMP