செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் வடகால் கரையோர ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்புகளை 15 நாளில் காலி செய்ய தாசில்தார் உத்தரவு

Published On 2018-08-27 10:26 GMT   |   Update On 2018-08-27 10:26 GMT
நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருப்பதால் ஸ்ரீவைகுண்டம் வடகால் கரையோர பகுதியில் ஆக்கிரமித்து கட்டிய குடியிருப்புகளை 15 நாளில் காலி செய்ய வேண்டும் என்று தாசிர்தார் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம்:

மழை காலங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர்நீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி, தமிழகமெங்கிலும் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தாமிரபரணி வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பொதுப் பணித்துறையினர் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்படியும், சப்-கலெக்டர் பிரசாந்த் மற்றும் வருவாய் ஆய்வாளர் வீரப்பன் ஆகியோரது ஆலோசனையின் பேரிலும் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஸ்ரீவைகுண்டம் வருவாய் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, தாசில்தார் சந்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்கால் கரையோர பகுதிகளான அண்ணாநகர், நளராஜபுரம், நளங்குடி, இசக்கியம்மாள்புரம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது, பல வீடுகள் வாய்க்கால் கரையோரத்தில் தண்ணீரை ஒட்டினாற்போல் இருப்பதால் மழை வெள்ளக் காலங்களில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து ஆக்கிரமிப்பு பகுதி மக்களிடம் வீடு வீடாக சென்று பேசிய தாசில்தார் சந்திரன், 15 நாட்களில் வீடுகளை காலி செய்திட வேண்டும். சொந்த வீடோ, நிலமோ இல்லாத நபர்களுக்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றார்.
Tags:    

Similar News