பூந்தமல்லியில் ஆக்கிரமித்து கட்டிய வீடு-கடைகள் இடிப்பு
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி, அம்மன் கோவில் தெருவில் சாலையை ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டப்பட்டு இருந்தன.
இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று காலை தாசில்தார் புனிதவதி, நகராட்சி கமிஷனர் சித்ரா மற்றும் வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் 3 ஜே.சி.பி. எந்திரத்துடன் அங்கு வந்தனர்.
அவர்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடு, கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை இடித்து அகற்றினர். அப்போது சிலர் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றப்பட்டதையொட்டி அப்பகுதியில் இணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் 100-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.