செய்திகள்

வில்லியனூர் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை

Published On 2018-08-25 10:07 GMT   |   Update On 2018-08-25 10:07 GMT
வில்லியனூர் அருகே டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே வடமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரி.

இவர் திருபுவனையில் உள்ள தனியார் மாத்திரை கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (வயது 16). இவர் அரியூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சந்தோஷ் அதிக சத்தத்துடன் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தாய் புஷ்பா பாடம் படிக்காமல் ஏன் டி.வி. பார்த்துக்கொண்டு இருக்கிறாய்? என்று சந்தோசை கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த சந்தோஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் படுக்கை அறை கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

அறை கதவு வெகு நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த புஷ்பா ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து சந்தோசை மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால், வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News