செய்திகள்

கம்பத்தில் நகை கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை

Published On 2018-08-24 08:53 GMT   |   Update On 2018-08-24 08:53 GMT
கம்பத்தில் கவரிங் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கம்பம்:

கம்பம் காளவாசல் தெரு 5-வது தெற்கு வீதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது50). இவர் கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் கவரிங் நகைக்கடை வைத்துள்ளார்.

தனது குடும்ப உறுப்பினர் விஷேசத்திற்காக பத்திரிகை கொடுக்க கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இன்று காலை வீட்டிற்கு திரும்பிய சுதாகர் கதவு உடைந்து கிடப்பதையும், பீரோ திறந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தேனியில் இருந்து மோப்ப நாய் பென்னி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த நாய் யுவராஜா தியேட்டர் சந்திப்பு வரை ஓடிவிட்டு நின்றது.

இதனையடுத்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் ஏதேனும் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பம் நகரில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே இதனை தடுக்க பொதுமக்கள் கண்காணிப்பு கேமிராவை பொருத்த வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News