செய்திகள்

லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீசார் 3 பேர் பணியிடை நீக்கம்

Published On 2018-08-23 03:16 GMT   |   Update On 2018-08-23 03:16 GMT
லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் 3 பேர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருவொற்றியூர்:

சென்னை மாதவரம், மஞ்சம்பாக்கம், மணலி மற்றும் எண்ணூர் விரைவு சாலை வழியாக சென்னை துறைமுகம் செல்லும் கன்டெய்னர் லாரிகள் முன்னேறி செல்வதற்காக ஒரு லாரிக்கு ரூ.100-ம், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடம் தலா ரூ.200-ம் போக்குவரத்து போலீசார் லஞ்சமாக பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றவரை போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதமாக வசூலித்தனர்.

ஆனால் அதற்குரிய ரசீதை போலீசார் வழங்கவில்லை. இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது.

இதையடுத்து இந்த விவகாரம் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண்குமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் சம்பவத்தன்று பணியில் இருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு, சிறப்பு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் ஏட்டு வெங்கடாச்சலம் ஆகிய 3 பேரையும் பணிஇடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 
Tags:    

Similar News