செய்திகள்

அரூர் அருகே தென்னை மரம் விழுந்து தொழிலாளி பலி

Published On 2018-08-20 16:38 GMT   |   Update On 2018-08-20 16:38 GMT
அரூர் அருகே தோட்டத்தில் வேலை செய்த போது தென்னை மரம் விழுந்து தொழிலாளி பலியானார்.
அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 49), கூலித்தொழிலாளி. இவர், இதேபகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ஆறுமுகம், அசோகன் உள்ளிட்ட 4 பேருடன் நம்பிப்பட்டியை சேர்ந்த சுகன் என்பவருடைய விவசாய நிலத்தை சீரமைக்கும் பணிக்கு சென்றனர். அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் தோட்டத்தில் உள்ள காய்ந்த தென்னை மரங்களை அகற்றும் பணி நடந்தது.

அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்ட ஒரு தென்னை மரம் சிவஞானம் மீது விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு அரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவஞானம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தென்னை மரம் விழுந்து தொழிலாளி இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. 
Tags:    

Similar News