செய்திகள்

ஆரணியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை- காதலன் தற்கொலை முயற்சி

Published On 2018-08-19 10:59 GMT   |   Update On 2018-08-19 10:59 GMT
ஆரணியில் இளம்பெண் தூக்கிட்டு இறந்ததால் காதலனும் தற்கொலைக்கு முயன்றார்.

ஆரணி:

ஆரணி ராட்டினமங்கலம் இ.பி.நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு விமல் என்ற மகன் மகள் சவுமியா (17) என்ற ஒரு மகள் உள்ளனர். வேலு, இறந்து விட்டார். இதனால் ரேணுகாவின் அரவணைப்பில் விமலும், சவுமியாவும் இருந்தனர்.

விமல் பெங்களூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். சவுமியா 10-ம் வகுப்பு முடித்து விட்டு கடந்த 3 ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் சவுமியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, உடலை வீட்டில் வைத்து இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை தாய் செய்தார். சவுமியாவின் தந்தை வழி பாட்டி கவுரி மற்றும் உறவினர்கள் ஆரணி பெரிய சாயக்கார தெருவில் வசிக்கின்றனர்.

அவர்களுக்கு, நேற்றிரவு 8 மணிக்கு தான் சவுமியா இறந்த தகவலை ரேணுகா கூறினார். அதிர்ச்சி அடைந்த பாட்டி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து சவுமியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். எதற்காக, தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான தகவல் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் பாட்டி சந்தேகமடைந்தார்.

இதையடுத்து, பேத்தியின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆரணி தாலுகா போலீசில் நிலையத்திற்கு உறவினர்கள் சிலருடன் சென்று பாட்டி கவுரி புகார் அளித்தார். போலீசார் புகார் மனுவை பெறாமல் இழுத்தடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாட்டி கவுரி இன்று காலை உறவினர்களுடன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தார்.

பின்னர், போலீசார் புகார் மனுவை பெற்றுக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, நேற்றிரவு சவுமியாவின் மாமனும், காதலனுமான நெசல் கிராமத்தை சேர்ந்த ரகுராமன் (20) என்பவர் சவுமியா தூக்கில் தொங்கிய அதே இடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதித்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமானதால், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சவுமியா தற்கொலைக்கு என்ன காரணம்? காதலன் திடீரென தற்கொலைக்கு முயன்றது ஏன்? சவுமியாவின் தாய் தகவலை மறைத்தது ஏன்? என்பது உள்பட பல்வேறு சந்தேகங்கள் நிலவும் இச்சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News