புதுவை சட்டசபை முன்பு வாகனங்கள் நிறுத்த நிரந்தர தடை
புதுச்சேரி:
புதுவை சட்டமன்றத்தில் அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் அலுவலகம் உள்ளது.அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்களை சந்திக்க நாள்தோறும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் சட்டமன்றத்துக்கு வருகை தருவார்கள். அவர்கள் சட்டமன்ற நுழைவு வாயில் ஒட்டியுள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வார்கள். பல ஆண்டுகளாக இந்த முறையே நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சுதந்திரதினவிழா பாதுகாப்புக்காக சட்டமன்றம் முன்பு வாகனங்களை நிறுத்த போலீசார் தற்காலிகமாக தடை விதித்தனர்.
தற்காலிகமாக அமைக்கப்பட்ட வாகனத்தை தற்போது போலீசார் நிரந்தரமாக்கி உள்ளனர். மேலும், சட்டமன்றத்தின் இருபுறங்களிலும் போலீசார் பேரிக்கார்டு அமைத்து வாகனங்களை நிறுத்த தடை விதித்தார்கள்.
அதோடு அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். திடீர் தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இருசக்கர வாகனங்களை தலைமை தபால் நிலையம் அருகிலும், அரசு மருத்துவமனைக்கு அருகிலும் பொதுமக்கள் நிறுத்தினார்கள்.
வழக்கமாக நகரத்தின் மக்கள் அதிக அளவில் கூடும் பிரதான சாலைகளில் கூட ஒருபுறம் வாகன பார்க்கிங் முறை அமலில் உள்ளது. அதேபோல் சட்டமன்றத்தின் முன்பு ஓருபுற பார்க்கிங்கை அமல்படுத்தி முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.