திருப்பரங்குன்றத்தில் ரெயில் மோதி மூதாட்டி பலி
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி (வயது 70). இவர் சிகிச்சை பெறுவதற்காக திருப்பரங்குன்றம் ரெயில் நிலையம் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலை வந்தார். அங்கு மருந்து வாங்கிவிட்டு ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் ஜெயக்கொடி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவரது தலை சுமார் 1 1/2 கி.மீ. தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு ஹார்விபட்டி அருகே கிடந்தது.
இது குறித்து மதுரை ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.