செய்திகள்

தண்டராம்பட்டு அருகே 10-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

Published On 2018-08-13 10:23 GMT   |   Update On 2018-08-13 10:23 GMT
தண்டராம்பட்டு அருகே செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மஞ்சம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் திலகவதி (வயது 15). நல்லவன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறிய திலகவதி திடீரென மாயமானார்.

எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் திலகவதியை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள சங்கர் என்பவருடைய விவசாய கிணற்றில் துர்நாற்றம் வீசியது. அப்பகுதிமக்கள் கிணற்றில் பார்த்தனர்.

அப்போது, மாயமான மாணவி திலகவதி அங்கு பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்டராம்பட்டு போலீசார், மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாணவி திலகவதி யாரிடமோ செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனமுடைந்த மாணவி திலகவதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News