செய்திகள்

செங்குன்றத்தில் பெட்ரோல் பங்க் மானேஜரிடம் கத்திமுனையில் ரூ.70 ஆயிரம் பறிப்பு

Published On 2018-08-12 08:26 GMT   |   Update On 2018-08-12 08:26 GMT
செங்குன்றத்தில் பெட்ரோல் பங்க் மானேஜரிடம் கத்தி முனையில் ரூ.70 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்குன்றம்:

தண்டையார் பேட்டை முத்தமிழ்நகரை சேர்ந்தவர் ஆனந்தன். செங்குன்றம் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மானேஜராக பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு ஆனந்தன் பெட்ரோல் பங்க்கில் வசூலான ரூ.70 ஆயிரத்துடன் மொபட்டில் தண்டையார் பேட்டை நோக்கி சென்றார். செங்குன்றம்-மாதவரம் நெடுஞ்சாலையில் வடபெரும்பாக்கம் அருகே சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆனந்தனை வழிமறித்து திடீரென கத்தியை எடுத்து ஆனந்தன் கழுத்தில் வைத்து சத்தம்போட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியது.

பின்னர் மொபட்டில் இருந்த ரூ.70 ஆயிரத்தை எடுத்துக் கொண்ட அந்த கும்பல் ஆனந்தனை கீழே தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியது. ஆனந்தனின் கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர்.

பெட்ரோல் பங்க் மானேஜர் ஆனந்தன் வசூல் பணத்தை இரவு கொண்டு செல்வதை நன்கு நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News