செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

Published On 2018-08-03 04:33 GMT   |   Update On 2018-08-03 06:11 GMT
ஆண்டிப்பட்டி அருகே கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது தோட்டத்து கிணற்றில் ஆண் பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆண்டிப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டனர்.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரை கொலை செய்து மர்ம நபர்கள் கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வெள்ளை வேஷ்டி மற்றும் சட்டை அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வந்து விசாரணை மேற்கொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News